ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பொது தேர்வில் பொன்னாப்பூர் து.அமிர்தத்தம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 10, 11, 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவிகளுக்கு மருதம் மக்கள் மன்றம் – பொன்னாப்பூர் சார்பில் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் 2024-2025கல்வியாண்டில் பயின்று முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த (26-01-2026) திங்கள்கிழமை காலை 9 மணியளவில் து. அமிர்தத்தம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



கடந்த 2024-2025 கல்வியாண்டில் பொன்னாப்பூர் து. அமிர்தத்தம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 472 மதிப்பெண்கள் பெற்று மாணவி கோ. இலக்கியா முதல் இடமும், 469 மதிப்பெண்கள் பெற்று மாணவி ரா.ச.பூவிதா இரண்டாம் இடமும், 468 மதிப்பெண்கள் பெற்று மாணவி பா.பார்கவி மூன்றாம் இடமும் பெற்றனர். பதினொன்றாம் வகுப்பை பொறுத்தவரை 600 மதிப்பெண்களுக்கு 491 மதிப்பெண்கள் பெற்று மாணவி பா. நிஷா முதல் இடமும், 481 மதிப்பெண்கள் பெற்று மாணவி த. தேவதர்ஷினி இரண்டாம் இடமும், 475 மதிப்பெண்கள் பெற்று மாணவர் பா. புவியரசு மூன்றாம் இடமும் பெற்றனர். பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 546 மதிப்பெண்கள் பெற்று மாணவி கோ. கனிஷ்கா முதல் இடமும், 517 மதிப்பெண்கள் பெற்று மாணவர் அ. விஜயதரன் இரண்டாம் இடமும், 516 மதிப்பெண்கள் பெற்று மாணவி இ. கார்த்திகா மூன்றாம் இடமும் பெற்றனர்.
10, 11, 12 வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு முறையே ரூ. 3000, ரூ.2000, ரூ. 1000 மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தலிங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், பள்ளி கல்வி வளர்ச்சி குழு பொறுப்பாளர்கள், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், மருதம் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பு. திருநாவுக்கரசு, முன்னாள் பள்ளி மாணவர்கள் குண. செந்தமிழன், ச.சுதாகர், இர. குணசீலன், து.அமர்நாத், த.ஆகாஷ் மற்றும் பள்ளி இந்நாள் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர். இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்வை மருதம் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பு. திருநாவுக்கரசு மற்றும் இர. தர்மசீலன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.






